திங்கள், 16 ஏப்ரல், 2018

திருவள்ளுவராண்டு

*தை முதல்நாள் தொடங்கும் திருவள்ளுவராண்டு பற்றிய விளக்கம்*
👇👇👇👇👇👇

*திருவள்ளுவராண்டு முறை தமிழர்களுக்குத் தொடர் ஆண்டு  இல்லாத குறையைப் போக்குகிறது*.

தொல்காப்பியர் ஓர் ஆண்டுக்கான ஆறு பெரும்பொழுதுகளைச் சொல்லும்போது ஆவணி மாதமாகிய கார்காலத்தையே தொடக்கமாகக் குறிப்பிடுகிறார். அதன்பிறகே கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் காலங்களை வரிசைப்படுத்துகிறார். இது 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் கார்காலத் தொடக்கமாகிய ஆவணி மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டனர் என்பதை உணர்த்துகிறது.

சித்திரை முதல் நாளைப் புத்தாண்டு என்று கொண்டாடும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்ததில்லை.

தமிழர்களுக்குத் தொடராண்டுக் கணக்கு இல்லை என்ற குறையைப் போக்க 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர்கள் கூடி தை முதல் நாளைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு முறையைக் கொண்டுவந்தனர்.

சித்திரைப் புத்தாண்டு முறை என்பது தமிழ்நாட்டை விஜயநகரப் பேரரசு கைப்பற்றி ஆண்ட காலப்பகுதியில் வழக்கத்திற்கு வந்திருக்கலாம். ஆனால் தெலுங்கரது புத்தாண்டான உகாதி ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில நாள்காட்டியின் படி ஏப்ரல் 6 அல்லது 7 தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
இந்த வேறுபாட்டுக்குக் காரணம் தெலுங்கர், கன்னடர் மற்றும் சில மாநிலத்தவர் சந்திரனின் ஓட்டத்தை வைத்து மாதங்களைக் கணக்கிடுகிறார்கள். தமிழர்கள் சூரியன் மேட இராசிக்குள் நுழைவது முதல் அந்த இராசியை விட்டு விலகும் நாட்களை சித்திரை மாதம் எனக் கணக்கிட்டனர்.

இந்துக்களுக்கு என்று இந்திய அளவில் ஒரு புத்தாண்டு கிடையாது.
இப்போதெல்லாம் தமிழர்கள் சனவரி முதல்நாள் கிறித்தவர்களின் புத்தாண்டாக இருந்தாலும் அதனையும் கொண்டாடுகின்றனர். வருமானம் வருவதால் இந்துக் கோயில்களில் சனவரி முதல் நாள் நள்ளிரவில் நடை திறக்கிறார்கள்.

இப்போது வழங்கும் ‘பிரபவ’’ தொடங்கி ‘அட்சய’’‘ ஈறாக உள்ள 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டதனால் அவற்றின் பெயர்கள் வட மொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம்7 இந்து 10-03-1940)
இந்த 60 ஆண்டு முறையால் தமிழரின் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் இரண்டையும் எண்ணிப் பார்த்து உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி மூன்று முக்கிய முடிவுகளை எடுத்தார்கள்.

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது.
2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
3. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31 யைக் கூட்டினால்) திருவள்ளுவர் ஆண்டு.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை.

இந்த முடிவை எடுத்தவர்களில் தமிழகத்தின் மூத்ததமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இந்த முடிவுகளை 1967 – 2011 வரை தமிழ்நாட்டை ஆண்ட திராவிடக் கட்சிகள் படிப்படையாக நடை முறைப்படுத்தி வந்தன. தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் தமிழ்புத்தாண்டு, திருவள்ளுவர் பிறந்த நாள், பொங்கல் நாள் என 2006 இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு சனவரி 28, 2008 அன்று ஒரு சட்டத்தை சட்ட சபையில் ஒரு மனமாக நிறைவேற்றியது. அதனை ஆதரித்து அதிமுக உறுப்பினர்களும் வாக்களித்தார்கள்.
தமிழர்களது புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மறைந்த ஜெயராம் ஜெயலலிதா மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஜெயலலிதா ஒரு இந்துத்துவ அடிப்படைவாதி. ஐயங்கார் பிரிவைச் சேர்ந்தவர். அண்ணாவின் பெயரைக் கட்சிப் பெயரிலும் அண்ணாவின் படத்தைக் கட்சிக் கொடியிலும் போட்டாலும் அவர் தனது குலம் மற்றும் மத நம்பிக்கைகளைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு இருந்தவர்.
“நான் ஒரு பிராமண இனத்தைச் சேர்ந்தவள். சாத்திரங்களின்படி அமைந்துள்ள புதுவருடத்தை தமிழ் என்ற போர்வையில் களங்கம் செய்வது தவறு. இது பிராமணிய இனத்தினையே அவதூறு செய்வது போல் உள்ளது. எனவே நான் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலை இந் நடைமுறையைத் தடைசெய்வேன்” என்று 2011 இல் நடந்த தேர்தல் மேடைகளில் முழங்கினார். இது ஒன்றே சித்திரை புத்தாண்டு தமிழர்க்கு உரியதல்ல அது பிராமணர்களுக்கு அதாவது ஆரியர்களுக்கு உரியது என்பது நன்கு புலப்படும்.

2011 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்தச் சட்டத்தை மாற்றிப் பழையபடி சித்திரை முதல்நாள்தான் தமிழரின் புத்தாண்டு என ஆகஸ்டு 23, 2011 அன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

சித்திரை மாதத்தின் தொடக்கத்தை தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வது ஏன் என்பது குறித்து சட்டசபையில் விளக்கம் அளித்த அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சுய விளம்பரத்திற்காக திமுக தலைவர் கருணாநிதி புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றியதாகக் குற்றம் சாட்டினார். மேலும் “சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்தின் பெயராகும்” என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்றப் பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லை.

திமுக தலைவர் மு.கருணாநிதி புத்தாண்டை தை மாதத்துக்கு மாற்றினாலும் அது அவர் எடுத்த முடிவல்ல. தமிழக அறிஞர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எடுத்த முடிவு!
சங்க இலக்கியத்தில் தை மாதத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பு சித்திரை மாதத்துக்குக் கொடுக்கப்படவில்லை. மேலே கூறியவாறு வானியல் அடிப்படையில் தை முதல் நாள் ஞாயிறு என்ற சூரியன் தனது தென்திசைச் (தட்சணாயனம்) செலவை முடித்துக் கொண்டு வடதிசை செலவைத் (உத்தராயணம்) தொடங்குகிறது. அதாவது தனு இராசியை விட்டு விலகி மகர இராசியல் ஞாயிறு புகுகிறது. தமிழர்களுடைய புத்தாண்டு ஞாயிற்றின் பயணத் தொடக்கத்தில் இருக்க வேண்டுமா? அல்லது நடுவில் இருக்க வேண்டுமா? அதாவது தையில் இருக்க வேண்டுமா? சித்திரையில் இருக்க வேண்டுமா?

தொல்காப்பியர் காலத்தில் ஆவணி மாதம் ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது எனத் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் மூலம் தெரிகிறது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.
முன்னூறு பாகை கொண்ட அண்டத்தை ஒவ்வொன்றும் 30 பாகை கொண்ட 12 வீடுகளாகவும் 12 இராசிகளாகவும் 27 நட்சத்திரங்களாகவும் பிரித்தது மனிதர்களே. ஒரு இராசி என்பது ஞாயிற்றின் ஓடு பாதையின் இருமருங்கிலும் (10 பாகையில்) காணப்படும் நட்சத்திரங்களே. நட்சத்திரங்கள் உண்மை என்றாலும் அதனை விதிக் கட்டுப்பாடின்றி ஒன்றோடு ஒன்று தொடுக்கும் போது வரும் உருவங்கள் (இராசிகள்) கற்பனையே. சில உருவங்கள் சிங்கம் போல் தோற்றமளித்ததால் சிங்க இராசி என்று பெயரிட்டனர். மேட இராசி ஆடுபோல் தோற்றம் கொண்டது. இருபத்தேழு நட்சத்திரங்களை 12 வீடுகளில் சரி சமமாக அடக்க முடியாத காரணத்தால் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் 4 கால்களாகப் பிரித்து ஒவ்வொரு வீட்டிற்கும் 2 நட்சத்திரம் ஒரு கால் என ஒதுக்கியுள்ளனர்.

தமிழன் கோயிலில் சமஸ்கிருத மந்திரம், தமிழன் திருமணத்தில் சமஸ்கிருத மந்திரம் என்பதுபோல, தமிழன் ஆண்டையும் சமஸ்கிருதமாக்கிய பிற பண்பாட்டின் ஆதிக்கத்தையே தமிழக சட்டசபையில் ஜெயலலிதா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் காட்டுகிறது. தமிழிலே பெயரில்லாத, சமஸ்கிருதத்தில் பெயருள்ள ஆண்டுகள் எப்படித் தமிழ் ஆண்டுகளாகும்?

தமிழர்கள் வாழ்வு இயற்கையை அடிப்படையாய்க் கொண்டது. ஆண்டை மட்டுமல்ல, மாதம், கிழமை நாள் இவற்றையும் இயற்கையின் அடிப்படையிலேயே கணித்தனர். ஒரு நாள் என்பது சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு. மாதம் என்பதற்கு திங்கள் என்ற பெயருண்டு. திங்கள் என்பது நிலா. நிலாவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்பட்ட காலம் என்பதால் அது திங்கள் (மாதம்) எனப்பட்டது.

சூரியன் தென்கோடியிலிருந்து, வடக்கு நோக்கித் தொடங்கும் பயணத்தின் முதல் நாளை ஆண்டின் முதல் நாளாகக் கொள்வதென தமிழ் அறிஞர்கள் தீர்மானித்தனர். அதன்படி தை முதல் நாள் சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கி – சித்திரை மாதம் தலைக்கு மேல் நிற்கும். ஆனி மாதக் கடைசியில் வடகோடிக்குச் செல்லும். புரட்டாசி மாதக் கடைசியில் தலைக்கு மேல் மீண்டும் வரும். மார்கழிக் கடைசியில் தென் கோடிக்குச் செல்லும். ஆக, சூரியன் தென்கோடியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கி, மீண்டும் தென்கோடியைச் சென்றடைய எடுத்துக் கொள்ள ஆகும் காலம் ஓர் ஆண்டு ஆகும்.

சூரியன் பூமியை ஒரு முறை சுற்றி வரும் சுற்றுப் பாதை ஒவ்வொன்றும் 30 பாகைகள் (Degrees) அளவுள்ள 12 பகுதிகளாக விதிக்கட்டுப்பாடின்றிப் (arbitrary) பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு பிரிவும் ஒரு இராசி எனவும் 12 இராசிகளினதும் தொகுதி இராசிச் சக்கரம் எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மகரம் முதல் தனு இராசி வரை உள்ள 12 சூரிய மாதங்கள் (இராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறது. பூமியைச் சுற்றிய சூரியனின் சார்பு இயக்கத்தில் இந்த ஒவ்வொரு இராசியிலும், சூரியன் இருக்கும் காலப்பகுதியே சூரியமாதம் ஆகும். இப்படி காலக்கணக்கைக் கணிப்பதை தமிழில் காலந்தேர் (காலம்+தேர்) என்று அழைத்தார்கள்.

தமிழர்கள் ஞாயிற்றின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கலைகளான சோதிடம், ஓரை பார்த்தல், சாதகம் பார்த்தல், முதலிய கலைகளுக்கு சூரியமாதத்தைக் கணித்துப் பயன்படுத்தினர். இந்தியாவில் மலையாளிகளும் தமிழரும் சூரியமாத முறையையே பின்பற்றுகிறார்கள். மலையாளிகள் மாதங்களுக்கு இராசிகளின் பெயரையே வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில்  சூரியமாத முறை வழக்கத்தில் இருந்தாலும் அம்மாதங்களைக் குறிக்க சந்திர மாதப்பெயர்களே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும், சூரியனைச் சுற்றி வருவதால் மாதங்களும் ஆண்டுகளும் உருவாகின்றன. இவ்விரு தோற்றப்பாடுகளும் ஒன்றிலொன்று தங்கியிராத இரண்டு வெவ்வேறு தோற்றப்பாடாக இருப்பதால், புதிய மாதப் பிறப்பும் புதிய நாள் தொடங்குவதும் ஒரே நேரத்தில் அமைவதில்லை. தமிழ் முறைப்படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட நாளில் சூரிய உதயம் தொடக்கம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரையான காலப் பகுதியாகும்.
வானியல் அடிப்படையில் ஞாயிறு தனு இராசியில் இருந்து மகர இராசிக்குள் புகுவதே தை புத்தாண்டுப் பிறப்பாகும். சித்திரைப் பிறப்பு மீன இராசியில் இருந்து மேட இராசிக்கு ஞாயிறு புகும் போது இடம்பெறுகிறது. முன்னது ஞாயிறு வடதிசைப் பயணத்தின் தொடக்கம். பின்னது ஞாயிறு வடக்கு நோக்கிய பயணத்தின் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையில் இருக்கிறது. அதாவது ஞாயிறு வான் நடுக்கோட்டை (celestial equator) கடக்கும் நாளாகும். எனவே பயணத்தின் தொடக்கத்தை வைத்து ஆண்டைக் கணிப்பதே பொருத்தமாக இருக்கும்.

சித்திரையை ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளும் பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுக் கணிப்பில் பல குறைபாடுகள் இருக்கின்றன. பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோர்பத்தி, ஆங்கீரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்ரபாணு, சுபாணு, பார்த்திய, விய,,....... ஹேவிளம்பி,.... ராஸஷ, குரோதன, அக்ஷய,,,,,,,, இவைதான் அறுபதாண்டு பெயர்கள். இவற்றில் எதுவும் தமிழ்ப் பெயரில்லை.

(1) பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இந்தப் புராணக் கதை அருவருப்பான, அறிவுக்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கிறது. அவற்றைத் தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது தமிழ் ஆண்டுகள் என ஒப்புக் கொள்ளமாட்டான்.

(2) சித்திரை முதல் நாளில் தொடங்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும். ஒரு சுற்று 60 ஆண்டுகள் முடிந்தால் மீண்டும் பழையபடி பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகள் தொடங்குகின்றன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவ‘ ஆண்டிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பது நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒவ்வாததாகும்.

வரலாற்றைப் பதிவு செய்யும் போது 60 க்கு மேலே ஒரு தொடராக ஆண்டைக் கணக்கிட முடியாது. ஒருவர் 60 வயதுக்கு மேல் உயிர் வாழ்ந்தால் அவர் அதற்கு மேல் தனது பிறந்த நாளைக் கொண்டாட முடியாது. மேலும் ஒருவர் மன்மத ஆண்டில் பிறந்தவர் என்று வைத்துக் கொண்டால் அவர் எந்த மன்மத ஆண்டில் பிறந்தவர் எனச் சொல்ல முடியாது. ஆக பற்சக்கர வடிவத்தில் வடமொழியில் அருவருப்பான பெயர்களைக் கொண்ட 60 ஆண்டுகளைப் பின்பற்றினால் வரலாற்றைப் பதிவு செய்வதில் குழப்பம் ஏற்படும். அறுபதுக்கு மேல் எண்ண முடியாது.

திருவள்ளுவர் பெயரில் உள்ள தொடர் ஆண்டு இந்தக் குழப்பத்தை அடியோடு நீக்க  உதவுகிறது. திருவள்ளுவர் ஆண்டு முறையில்,
· * 60 ஆண்டு சுழற்சி வராது.
· * தொடர்ச்சியாக ஆண்டுகளைக் கணக்கிடலாம்.
· * தமிழர்கள் வரலாற்றில் முதல் முறையாக தங்களுக்கென ஒரு தொடராண்டு (சகாப்தம்) உருவாக்கப் பட்டுள்ளதென பெருமிதத்துடன் கூறும் நிலை ஏற்படும்.
· * தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் திருவள்ளுவருக்குத் தலைசிறந்த நினைவாக அமையும்.
· * தமிழரின் திருநாளான பொங்கல் விழா தனிச் சிறப்படையும்.

ஒரு இனம் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வருகின்ற மரபு அந்த இனத்திற்குத் தீங்கிழைக்கிறது என்று கண்டால் அந்த மரபு ஒழிக்கப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும். குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவை இன்று சட்டப்படி தடைசெய்யப்பட்டுவிட்டன. ஆதலால் தைப்பொங்கல் நாளான தைத்திங்கள் முதல் நாள் – திருவள்ளுவர் பிறந்த நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டு என ஏற்றுக் கொள்வதில் தவறில்லை!

இருந்தாலும் இந்து சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் சித்திரைப் புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்று அழைக்காமல் சித்திரைப் புத்தாண்டு என்று கொண்டாடலாம். தமிழ் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளை ஆங்கிலப் புத்தாண்டாகக் கொண்டாடலாம்.
ஆனால் சமய வேறுபாடின்றி ஒரு இந்துத் தமிழனும் ஒரு கிறித்தவ தமிழனும் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்றும் பொங்கல் நாள் என்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் என்றும் கொண்டாடுவதே "தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு! அமிழ்தம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்" என்பதை மெய்ப்பிக்க உதவும்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என நிறைவேற்றிய சட்டம் நீக்கப்பட வேண்டும்.

"“அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்குத் தைம்முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”

“தையே முதற்றிங்கள்; தைம்முதல் ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று; பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம்முதல்நாள் பொங்கல் நன்னாள்”

“நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”
- என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.